ஊடகவியலாளருக்கும் எனக்கும் எவ்விதப் பிரச்சினையும் இல்லை : பிரதியமைச்சர் அமீர் அலி

ஊடகப்பிரிவு 
நேற்று ( 28 / 12 / 2016 )  மண்முனைப் பற்று ஆரையம்பதி  பிரதேச செயலகத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  பிரதேச செயலாளர் திருமதி சத்தியானத்தி தலைமையில்  இடம்பெற்றது 
 இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு இவ்வாறு கருத்தினை வெளியிட்டிருந்தார்.
 தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்.
சில மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கின்றனர்.  எதனை எங்கு பேச வேண்டும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை மேலும் தாங்கள் அனுபவசாலிகள் என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் பேசுவது தலைக்கும் வாய்க்கும் சந்தமில்லாமல் பேசுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினை எங்களால் எங்களால் சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. 
ஏனென்றால் கடந்த 26 / 12 / 2016 மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களை முதற்கட்டமாக பதிவுகளை மேற் கொள்ளுமாறு கூறியும் கூட்டம் முடிந்த பிற்பாடு கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தை உங்களுக்கு அறிவிப்போம் என்று ஊடக நண்பர்களுக்கு சொல்லப்பட்ட போதும் கூட அது வேறு வகையாக திரிவுபடுத்தப்பட்டு தான் ஊடகவியலாளரை அனுமதிக்கவில்லை என்கிற தொனியில் காட்டமான பிரச்சாரத்தினை அவர்கள் முன்னெடுத்திருந்தனர். நான் இதற்காக அஞ்சுபவனுமில்லை பயப்படுகின்றவனுமில்லை.  
ஆனால் மாகாண சபை உறுப்பினர்கள் அவர்களுக்கு உரித்தான அதிகாரங்களை அவர்களுக்குள்ளே பேசிக் கொள்ளாமல் மட்டக்களப்புக்கு வந்து செய்தியாளர்களுக்கு செய்தி கொடுப்பதற்காகவே பேசுகின்றனர். இதனை தவிர்ந்து கொள்வதற்காகத்தான் ஊடக நண்பர்களை இதிலிருந்து ஓரமாகி வைக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தோம். மாகாண சபை கல்வி எல்லைப் பிரச்சினைகள் போன்றன மாகாண சபையில் பேசப்படாமல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அதனை உரத்துப் பேசுகின்றனர். ஊடகவியளாளர்கள் அதனை செய்தியாக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு பேசுகின்றனர். 
ஆனால் இவ்வாறான விடயங்கள் அங்கு பேசப்பட வேண்டிய விடயமல்ல மாகாண சபை மட்டத்தில் பேசித்தீர்க்க வேண்டிய விடயத்தினை அங்கு பேசித் தீர்க்காமல் ஏதேதோ பேசுகின்றார்கள்.  இவ்வாறான விடயங்கள் வேடிக்கையாகவும் கவலையாகவும் உள்ளது  . இவ்வாறான செயற்பாடுகளை மாற்றியமைக்க ஊடக நண்பர்களின் பங்களிப்பு அவசியம் ஒரே விடயத்தையே தொடர்ந்து பேசுகின்றனர் தான் பேசியது ஊடகத்தில் வர வேண்டும் என்பதற்காக அன்றி வேறொன்றில்லை.  ஆனால் இவ்மாவட்டத்திற்கு வருகின்ற எத்தனையோ அபிவிருத்தி பணிகள் வேலைவாய்ப்புகள் வராமல் தடைப்பட்டுள்ளன இவ்வாறான விடயங்கள் பற்றிப் பேசவில்லை என்று தனதுரையில் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின்  இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் , அதிகாரிகள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.