மகிந்தவை நெருக்கடிக்குள் வைத்திருக்க மைத்திரியால் முடிந்துள்ளது ! – சர்வதேச நெருக்கடிக்குழு !

n 
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்த போதும் ஜனாதிபதியாகிய பின்னர் மைத்திரிபால சிறிசேனவினால், நாட்டின் அரசியலில் மாற்றங்களை கொண்டு வர முடிந்துள்ளது என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.

குழுவின் சிரேஸ்ட ஆய்வாளர் அலன் கீலன், இலங்கைக்கு சென்று அண்மையிலேயே நாடு திரும்பியிருந்தார்.

இந்தநிலையில் அவர் மைத்திரிபால சிறிசேனவினால் பல முன்னேற்றமான செயற்பாடுகளை செய்ய முடிந்திருக்கிறது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

19வது திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் நாடாளுமன்றத்துக்குள் உள்ள மஹிந்த ஆதரவுக் குழுக்களின் எதிர்ப்புக்களை கட்டுப்படுத்த அவரால் முடிந்துள்ளது.

நல்லிணக்கம் தொடர்பில் வடக்கு கிழக்கில் காணிகளை பொதுமக்களிடம் கையளித்தல், தேசியகீதத்தை தமிழில் பாட மீண்டும் அனுமதித்தமை, முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள கடும்போக்காளர்களின் தாக்குதல்களை கட்டுப்படுத்தியமை போன்ற செயற்பாடுகளை அவர் செய்து முடித்திருக்கிறார்.

அதேநேரம், தேர்தல் முறைகளை மாற்றியமைக்கும் செயற்பாடுகளிலும் அவர் முன்னேற்றங்களை கண்டு வருகிறார் என்று கீலன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தவிர, மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரின் நிதி மோசடிகளை கண்டுபிடிக்கும் செயற்பாடுகளில் அவர் சிறப்பாக செயற்பட்டு நாட்டின் ஊழல்களை களையும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் என்று கீலன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மஹிந்தவை ஒரு இறுக்கமான நிலையில் வைத்திருக்க மைத்திரியினால் முடிந்துள்ளது என்று கீலன் தெரிவித்துள்ளார்.