சமூக சேவையாளர் அஷ்ரப் ஹுஸைனின் மறைவு ஈடு செய்யமுடியாது. – ரிஷாட் அனுதாபம்

சிறந்த சமூக சேவையாளரும், மார்க்கப் பற்றாளருமான அஷ்ரப் ஹூஸைனின் மறைவு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி ஏனைய சமூகங்களுக்கும் பாரிய இழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சமூப்பெரியார் அஷ்ரப் ஹுஸைன் தனது வாழ் நாளை மக்கள் பணிக்காகவே பயன்படுத்தியவர். ஏழைகளின் துன்பங்களையும் அனாதைகளின் கஷ்டங்களையும் தீர்ப்பதற்காக அவர் பல்வேறு சமூக நலன் அமைப்புக்களின் முக்கிய பதவிகளிலிருந்து அவர்களின் வாழ்வு சிறக்க உதவியவர்.
திகாரிய அங்கவீன நிலையத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான அஷ்ரப் ஹுஸைன் அங்கவீனர்களின் நலன்களுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு “அங்கவீனம் இயலாமை அல்ல” என்பதை நிரூபித்துக் காட்டியவர். 
ஜனாஸா நலன்புரிச்சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் ஜனாஸாக்களை இலகுவில் எடுத்துச்செல்வதற்கும் வைத்தியசாலைகளிலிருந்து ஜானாஸாக்களை எடுத்துச் செல்வதற்கும் இலவச வாகனங்களை வழங்க உதவிய பண்பாளர்.
சர்வதேச வை எம் எம் ஏ பேரவையின் ஆயுட்காலத்தலைவராக இருந்து மக்கள் பணியாற்றியவர். இலங்கை விழிப்புலன் இழந்தோர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து பல முக்கிய பணிகளை ஆற்றியுள்ளார்.
அன்னாரின் மறைவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.