இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருகின்றது – பொதுபல சேனா

தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் ஆபத்தான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருவதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகள் வியாபித்து வருவதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

 
சிங்களத் தலைவர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டிருப்பதாகவும் மோதலைத் தவிர்த்து இஸ்லாமிய தீவிரவாதத்தின் அச்சுறுத்தல்களை கண்காணிக்குமாறும் கோரியுள்ளார்.
இலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களுக்கு பெருந்தொகைப் பணம் கிடைக்கப் பெற்று வருவதாகவும் இது பற்றி எவரும் கவனம் செலுத்துவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 
நோர்வே அரசாங்கம் தமக்கு பணம் வழங்கி வருவதாகவும் சீ.ஐ.ஏ. புலனாய்வு பிரிவின் சூழ்ச்சித் திட்டங்களை தாம் முன்னெடுத்து வருவதாக விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
அவ்வாறு நோர்வேயிடம் பணம் பெற்றுக்கொண்டிருந்தால் அது பற்றிய விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுபலசேனா இயக்கம் அரசாங்கத்திடமோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமோ ஒரு சதமேனும் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.