விகிதாசார பிரதிநிதித்துவமுறை நீக்கப்படுமானால் சிறுபான்மையினர் பாதிப்பை எதிர்நோக்குவர் என்கிறார் – சட்டத்தரணி முஸ்தபா

 எம்.வை.அமீர்

இலங்கையில் விகிதாசார பிரதிநிதித்துவமுறை உயிருடன் இருப்பதாலேயே இங்குவாழும் சிறுபான்மையினர் ஓரளவேனும் அவர்களை அவர்களே ஆளும் நிலை ஏற்பட்டிருந்ததாகவும் இவ்வாறானதொரு நிலை நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக வேறு ஏதாவது முறைகள் உட்புகுத்தப்ப்படுமாக இருந்தால் அதன்காரணத்தால் சிறுபான்மையினர் தங்களது பிரதிநிதித்துவங்களை இழக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேசசபையின் மக்கள் பிரதிநிதியும் உயர்பீட உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஸ்தபா எச்சரிக்கை விடுத்தார்.

பிழையான வழிகாட்டலின் காரணாமாகவும் உயர் அழுத்தத்தின் காரணாமாகவும் பாரம்பரியமாக நெற்செய்கையில் ஈடுபட்டு வந்த சுமார் 750 ஏக்கர் காணிகள், பொருத்தமில்லாத கரும்புச்செய்கைக்கு திணிக்கப்பட்டதை எதிர்க்கும் காணிச்சொந்தக்காரர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேசசபையின் மக்கள் பிரதிநிதியும் உயர்பீட உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று 2015-04-05 ம் திகதி சம்மாந்துறையில் றஹீம் அவர்களது இல்லத்தில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்  சங்கத்தின் தலைவர் ஏ.எல்.அசனார் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

1 (1)

விகிதாசார பிரதிநிதித்துவமுறையின் ஊடாகவே சிறுபான்மையினர் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் திகழ்வதாகவும் அதனுடாக தங்களது காணிப்பிரட்சினை போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளை பேசக்கூட முடிவதாகவும் அந்த அடிப்படையிலேயே தற்போது ஏற்பட்டுள்ள காணிப்பிரட்சினையை சிறுபான்மை அமைச்சர்கள் ஊடாக அனுகமுடிவதாகவும் தெரிவித்தார்.

இன்று நாட்டில் இடம்பெற்றுள்ள ஆட்சிமாற்றத்தின் காரணமாகவும் இருபெரும் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளதாலும்,  பாராளமன்றத்தில் எதிர்க்கட்சி அற்ற நிலை தோன்றியுள்ளதாகவும், குறித்த எதிரக்கட்சி தலைவர் பதவிக்கு சிறுபான்மை கட்சியின் தலைவரான இரா சம்மந்தன் போன்றவர்கள் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், குறித்த எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இரா சம்மந்தன் அவர்களை நியமிப்பதன் ஊடாக ஜனநாயகத்துக்கு உயிருட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மூன்று சமூகங்களையும் சேர்ந்த சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் குறித்த விவசாய நிலத்தின் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாகவும் இவர்களுக்கான நியாயம் கிடைக்க அதுசார்ந்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து தீர்வைப் பெறுவதற்கு பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயற்ப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

2 (1)