அரசியல்வாதி என்பவன் மண் வியாபாரத்துக்கும் , மாட்டு வியாபாரத்துக்கும் உதவி செய்பவனாக இருக்கக்கூடாது !

அசாஹீம் 

 

அரசியல்வாதி என்பவன் மண் வியாபாரத்துக்கும், மாட்டு வியாபாரத்துக்கும் உதவி செய்பவனாக இருக்கக்கூடாது. மாறாக மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து, சாதி மத பேதங்களை மறந்து தமது சேவைகளை செய்ய வேண்டும் அதுதான் காலத்தின் தேவையும், நம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு அரசியல் வாதிகள் செய்யும் பிரதி உபகாரமும் ஆகும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார் .

3_Fotor

 

நேற்று  (28/02/2016) பிரதி அமைச்சர் அமீர் அலியின் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட களுவாஞ்சிக்குடி சித்தி விநாயகர் பாலர் பாடசாலை கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு உரையாற்றிய போது பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

வரலாற்றில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக களுவாஞ்சிக்குடியில் “சதோச” நிறுவனத்தின்  கிளை இன்று கெளரவ அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது, அது தமிழ் பிரதேசம் என்று நாங்கள் புறக்கணிக்க விடவில்லை, ஆனால் நான் மட்டு மாவட்டத்து அபிவிருத்தி குழு தலைவராக இருப்பது சில தமிழ் அரசியல் வாதிகளுக்கு ஒவ்வாமையாக இருக்கிறது, இதனால் இனவாதம் பேசி காலங்கடத்தி தமது நிலைப்பாட்டை அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் திணிக்க முனைகின்றனர், இவ்வாறான இனவாதம் பேசி இரண்டு சமூகங்களுக்கிடையிலான மெய்யுறவை கெடுக்க முனைகின்ற அரசியல் வியாபாரிகள் கடந்த காலங்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட வரலாறு நமக்கு தெரிந்ததே.

 

ameer ali

நாடாளவிய ரீதியில் இன,மத பேதங்களுக்கு அப்பால் சேவை செய்து வருபவர் எமது தலைவர் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் கெளரவ ரிசாத் பதியுதீன் அவர்கள், முன்னாள் பிரதி அமைச்சர் நண்பர் கணேச மூர்த்தி அவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த சதொச அமைக்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள பல பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க உள்ளோம்,இதன் மூலம் நியாய விலையில் பாவனையாளர்கள் பொருட்களை பெற முடியும், எனவே இனவாதம் பேசி எமது சேவையை முடக்க நினைக்கின்ற இனவாதம் பேசுகின்றவர்களுக்கு நான் ஒன்றை கூறவிரும்புகிறேன், உங்கள் அறிக்கைகள் தமிழ் முஸ்லிம் பரஸ்பர உறவை இல்லாமல் ஆக்கிவிடாது. மாறாக எனது சேவை தொடர்ந்தும் இந்த மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கும் என்பதை இங்கு பதிய விரும்புகிறேன்
என்று கூறினார்.
இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷட் பதியுத்தீன் , கைத்தொழில் வர்த்தக அமைச்சின் ஆலோசகர் கணேச மூர்த்தி மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் சாள்ஸ் திட்டப்பணிப்பாளர் நெடுன் செழியன் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கோபால ரட்ணம், அமைச்சரின் இணைப்பாளர்களான லத்தீப் ஹாஜி, பிரதி அமைச்சரின் மட்டு மாவட்ட இணைப்பாளர் ஜோன் பாஸ்டர் மற்றும் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

2_Fotor