தாஜூடீன் கொலைச் சம்பவம் தொடர்பாக அனுர சேனாநாயக்க கைது செய்யப்படலாம் !

waseem
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலைச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நான்கு ஆண்டு முன்னர் நடந்த மரணம் கொலை சம்பவம் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.

தாஜூடீனின் மரணம் கொலை என்பதற்கான சாட்சியங்கள் இருந்த போதிலும் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து கடந்த 13 மாதங்களாக நடவடிக்கை எடுக்காதது தொடர்பில், நீதவான் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதியமைச்சு ஆகிய நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலாக இருந்து வந்தது.

கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் நேற்று விடுத்த உத்தரவு காரணமாக அந்த சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது.

தாஜூடீன் கொலை சம்பந்தமாக 16 சந்தேக நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்படும் விதத்தில் அவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்து, விசாரணைகள் பற்றிய ஆவணங்களை காணாமல் போக செய்ததாக கூறப்படும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவே முதலில் கைது செய்யப்படவுள்ளார்.

அத்துடன் தாஜூடீனின் கொலை நடந்த 2012 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி கிருளபனை மற்றும் நாராஹென்பிட்டி தலைமையக பொலிஸ் பரிசோதர்களாக பணியாற்றிவர்களும் முதல் சுற்றில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் சிலர் நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட வாக்குமூலத்தை வழங்க விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.