புத்தளம் காஸிமிய்யாவின் குறைபாடுகளை நிவர்த்தித்துத் தருமாறு முக்கியஸ்தர்கள் வேண்டுகோள்..!

 

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் அக்கல்லூரியின் நிர்வாகிகளும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர். 

அரபுக் கல்லூரிக்கு அண்மையில் விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும், கல்லூரி முக்கியஸ்தர்களுக்குமிடையிலான சந்திப்பொன்றின் போதே, கல்லூரியின் அதிபர் அப்துல்லாஹ் ஹசரத் மற்றும் சமூக சேவையாளரும், புத்தளம் நகரசபை முன்னாள்  உறுப்பினருமான ஆசிரியர் முஹ்ஸி ரஹ்மதுல்லாஹ் ஆகியோர்  அமைச்சர் றிசாத்திடம் இந்த வேண்டுகோளை விடுத்தனர். 

7M8A1790_Fotor

அமைச்சர் கடந்த காலங்களில் இந்தக் கல்லூரிக்கு ஆற்றிய பணிகளை நினைவுட்டிய இவர்கள், சுமார் 128 வருடம் பழைமை வாய்ந்த இந்த அரபுக்கல்லூரி உலமாக்களையும், மௌலவிமார்களையும் உருவாக்குவதில் ஆற்றிவரும் பங்களிப்புக்களையும் விளக்கினர். அத்துடன் நாட்டின் நாலா பக்கங்களிலும் இருந்து இங்கு வரும் மாணவர்கள், இக்கல்லூரியில் கற்பதனால் தேவைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அமைச்சர் றிசாத் 1999 ஆம் ஆண்டு இந்தக் கல்லூரிக்கு விஜயம் செய்து, கல்லூரியின் ஸ்தாபகர் மஹ்மூத் ஆலிமுக்கு தபால் முத்திரையும், முதல்நாள் கடித உறை ஒன்றையும் வெளியிட்டு வைத்ததாக அவர்கள் அங்கு நினைவுபடுத்தினர். 

7M8A1812_Fotor

புத்தளத்தின் சரித்திரத்தில் முன்னாள் சபாநாயகர் எச்.எஸ்.இஸ்மாயிலுக்கு பிறகு மஹ்மூத் ஆலிமுக்கே இவ்வாறான முதல் நாள் தபால் உறை வெளியிட்டு வைக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த முயற்சியை வெற்றிகரமாக மேற்கொள்வதில் அமைச்சர் எதிர்நோக்கிய கஷ்டங்களையும், அதுதொடர்பில் அரசின் முக்கியஸ்தர்களுடன் முரண்பட்டமையையும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.  

கல்லூரிக்கென புதிய கட்டிட நிர்வாகத் தொகுதி அடங்கிய கேட்போர் கூடம் ஒன்றை அமைத்துத் தருமாறு அப்துல்லாஹ் ஹசரத் அவர்களின்  வேண்டுகோளை தாம் சாதகமாக பரிசீலிப்பதாகவும், இவ்வாறான தொகுதி ஒன்றை உருவாக்குவதில் தமது பூரண பங்களிப்பும் உதவியும் இருக்குமெனவும் அமைச்சர் உறுதியளித்தார். 

அத்துடன் அரபுக் கல்லூரியில் கற்கும் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானத்தை தனது சொந்த நிதியில் புனரமைத்துத் தருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

மாணவர்களின் இன்னோரன்ன பிரச்சினைகளை தாம் முடிந்தளவில் தீர்த்துத் தருவதாகவும், அகதிகளுக்கு வாழ்வளித்த இந்த புத்தளம் மக்களை தாமும், வடபுல முஸ்லிம் சமூகமும் என்றுமே மறப்பதற்கில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

மௌலவி ஆசிரியர் நியமனம், மதரசாக்களுக்கு அறநெறி பாடசாலைகளுக்குரிய அந்தஸ்து, கொடுப்பனவுகள் மற்றும் பிற வசதிகள் குறித்தும் அப்துல்லாஹ் ஹசரத் விடுத்த வேண்டுகோளை, அரசாங்கத்தின் உயர் மட்டத்துக்கு கொண்டுவந்து ஆவன நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

புதிய அரசமைப்பு சீர்திருத்தம், தேர்தல் முறை மாற்றம் ஆகியவற்றில் முஸ்லிம்களின் காத்திரமான பங்களிப்பு குறித்தும் அங்கு விரிவாக பேசப்பட்டது. இந்த நிகழ்வில் எம்.எச்.எம். நவவி எம்.பி, ஐதேக அமைப்பாளர் அலிகான், மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் சப்ரி ஆகியோரும் பங்கேற்றனர்.