இலங்கையில் எண்ணெய் வள ஆய்வு : அமைச்சர் சந்திம வீரக்கொடி !

sandima-total-agrement
 எண்ணெய் வள ஆய்வில் பிரான்சை தளமாக கொண்ட ஒரு அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்  சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வில் பிரான்சை தளமாக கொண்ட Total என்ற பல்தேசிய எண்ணெய் நிறுவனம் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

இதற்கான உடன்பாடே நேற்றைய தினம் கையெழுத்திடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் வர்த்தக ரீதியாக எண்ணெய் அகழ்வு மற்றும் எரிவாயு அகழ்வு மேற்கொள்ளப்படுவதற்கு வாய்ப்புகள் இருந்தால், பிரெஞ்சு நிறுவனத்துடன், உற்பத்திப் பங்கீட்டு உடன்பாடு ஒன்றுக்கான பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு கடற்பரப்பில், எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகள் மற்றும் தரவுகள் சேகரிப்பை மேற்கொள்ளும் இந்தக் கூட்டு ஆய்வுக்கு 25 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படுகிறது.

50 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் எண்ணெய் வளம், மற்றும் எரிவாயு வளம் உள்ளதா என்று இந்த ஆய்வுகள் இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ளப்படும்.

உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றாக உள்ள Total நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு, உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிறுவனம் உலகில் 130 நாடுகளில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டு ஆய்வு உடன்பாடு குறித்த பேச்சுக்கள் 2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட போதும், நடைமுறைப் பிரச்சினைகளால் உடன்பாடு கையெழுத்திடப்படுவது தாமதமாகியது எனவும் அவர் தெரிவித்தார்.