அதிகமாக கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புண்டு !

 

ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும்  சிடு சிடு முகத்துடன் கோபத்துடனே இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோபத்தினால் படிக்கும் மாணவர்களுக்கும் கூட இதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நோயை தடுக்க சினத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

images 

சிறு குழந்தைகளோ, இளைஞர்களோ இன்றைய இளம் தலைமுறையினருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது. அடிக்கடி கோபப்படுவதால் இரத்த அழுத்தம் 160-80 என அதிகரிக்கிறது. கோபப்படும் நேரத்தில் செயல்பாடுகளை நாம் உணர்வதில்லை. கோபம் வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. அதுவே, உடலின் இரத்தக்குழாயை சுருக்கி விடுகிறது. 

உடலில் இரத்தம் செல்வது குறைவதால், முகத்தில் அதிக இரத்தம் தேங்கி, முகம் சிவப்பாகிறது. அதிக கோபம் வரும்போது, அதிகமான அளவு இரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால், மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போய் திடீர் மரணங்கள் சம்பவிக்கின்றன. 

மனிதர்களின் கோபத்தினால் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது, இதய நோய்கள் ஏற்படுவது நிச்சயம். இன்றைக்கு படிக்கும் மாணவர்களுக்கு இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கு ஏற்படும் கோபத்தினால் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் மாணவர்களை தாக்கத் தொடங்கியுள்ளன. 

எனவே மாணவர்களிடையே கோபம் ஏற்படுவதை தவிர்க்க அவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகளை அளிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருதயம் நன்றாக இருந்தால்தான் ஒரு மனிதன் நன்றாக இருக்கமுடியும். எனவே கோபத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ நினைத்தாலே மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.