ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில்; பிக்கு உள்ளிட்ட குழுவினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

 

judgement
ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட மற்றுமொரு பிக்கு உள்ளிட்ட குழுவினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரரரை கைதுசெய்து, விளக்கமறியலில் வைத்ததை அடுத்து, நீதிமன்ற வளாகத்தில் சிலரால் அமைதியின்மை ஏற்பட்டது. 

இது தொடர்பில் பிக்குகள் உள்ளிட்ட சிலர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, பொலிஸாருக்கு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இதன்படி விசாரணைகளை மேற்கொண்ட ஹோமாகம பொலிஸார் காணொளிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களைக் கொண்டு சந்தேகநபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நேற்றையதினம் உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.