பிரபல ஆப்கான் பெண் – சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். ஆப்கான் பெண்'(Afghan Girl) என்று பெயரிடப்பட்ட  ஷர்பத் பிபி என்ற பெண்ணின் புகைப்படம் ஜூன்,1985 ஆம் ஆண்டு ‘நேஷனல் ஜியோக்ரபி இதழில் அட்டைப் படமாக வெளிவந்து உலகப் புகழ்பெற்றது.

இப்படம் 1980 இல் ஆப்கானிஸ்தான் நிலை மற்றும் உலக முழுவதுமிருக்கும் அகதிகளின் நிலையை வெளிப்படுத்துவதாக இருந்தது. அவளின் பச்சை நிறக் கண்களும் அது சொன்ன செய்தியும் உலகத்தை கவனிக்க வைத்தது.

அந்த கண்களுக்குப் பின்னே உறைந்துகிடந்த துயரம் அன்றைய ஆப்கானின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. “ஆப்கன் மோனலிஷா” என்று இப்பெண்ணை அழைக்கக் காரணமாக இருந்த இப் புகைப்படத்தை எடுத்தவர் ‘ஸ்டீவ் மெக்கரி’ எனும் புகழ்பெற்ற நேஷனல் ஜியோக்ரபி புகைப்படக்காரர் ஆவார்.

அந்த பெண்ணின் பெயர் ஷர்பத் பிபி இவர் தோரா போரா மலைப்பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. சோவியத் – ஆப்கான் போரின் போது தன் ஆறு வயதில் சோவியத்தின் குண்டுகளுக்கு தன் பெற்றோர்களைப் பலி கொடுத்துவிட்டு, தன் சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகளோடு உயிர் பிழைக்க பனி மலைகளைக் கடந்து எல்லைதாண்டி பாகிஸ்தான் முகாம்களில் அடைகலம் அடைந்தவர்.

இவர் தற்போது ரஹ்மத் குல் என்பவரை திருமணம் செய்துள்ளார்.  2002 இல் புகைப்படக் கலைஞர் ‘ஸ்டீவ் மெக்கரி’ அந்தப் பெண்ணைத் தேடி கண்டு பிடித்து மீண்டும் புகைப்படம் எடுத்தார்.

இந்த ஆப்கான் பெண்ணிற்கு தற்போது பாகிஸ்தான் அரசு தேசிய அடையாள அட்டை வழங்கி உள்ளது. ஷர்பத், அவரது கணவர் ரஹ்மத், ஷர்பத்தின் மகன்கள் வலிகான், ரவுப்கான் ஆகியோருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கியுள்ளது.

F9D31C3C-12A0-4089-82CD-FB5BA0E9C473_L_styvpf

இது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்ணுக்கு எவ்வாறு பாகிஸ்தானில் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது என சர்ச்சை வெடித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை மனுவில் ஷர்பத் பெசாவரில் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலியாகத் தரப்பட்டு அவருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேசிய தகவல் மற்றும் பதிவு அதிகாரிகள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஷர்பத் குடும்பத்தினரின் அடையாள அட்டைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.