8ஆம் திகதி 9 எம்.பி.க்கள் உட்பட 26 பேருக்கு அழைப்பாணை!

banner-upfa-v3

 நீதிமன்ற உத்தரவை அவமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இந்த 26 பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டவே மேற்கண்டவாறு அழைப்பாணை விடுத்துள்ளார்.

இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வருவதையடுத்து, ஆணைக்குழுவின் கட்டடம் இருக்கின்ற பிரதேசத்தை அண்மித்த பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை தடுப்பதற்கு பொலிஸாரினால் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவு பெறப்பட்டது.

நீதிமன்றத்தின் தடையுத்தரவை அவமதித்த குற்றச்சாட்டின் பேரிலேயே மேற்கண்ட 26 பேருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகபெரும, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, ஜயந்த கெட்டகொட மற்றும் சரத் வீரசேகர, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண உறுப்பினர் உதயன் கம்பன்பில உள்ளிட்ட 26 பேருக்கே இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.